மனவளம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத வாழ்க்கை நியதியாகும். இயற்கையில் அமைந்துள்ள மறை பொருட்கள் எண்ணில் அடங்கா. அவையாவும் உடலுக்கும் உயிருக்கும் இடையே, உயிருக்கும் மனதுக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையே, ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே, தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையே, மனிதனுக்கும் விரிந்த பேரியக்க மண்டலத்திற்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற பொருள்களுக்கும் இடையே மனித மனதின் மூலமே வெளிப்படுகின்றன. இத்தகைய கோடிக்கணக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் மனித மனதால் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகளால் ஏற்றுக் கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம். மனித மனதின் தொடக்கம், எல்லாம்வல்ல, காலம் கடந்த, எல்லையற்ற மெய்ப்பொருளேயாகும். அதன் இயக்கங்கள் பேரியக்க மண்டல உணர்வுகள் அனைத்தும் ஆகும். அதன் முடிவோ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய மனமேயாம்.
இத்தகைய பேராற்றலுடைய மனதைப் பெற்ற மனிதன் அதன் மதிப்பை உணர வேண்டும். ஆக்க முறையில் அம்மனதைப் பயன்படுத்த வேண்டும். பயன்கண்டு பேரின்ப நிலையிலே வாழ வேண்டும். இந்த மதிப்புள்ள தகுதியே மனிதன் பெற ஏற்ற திட்டமிட்ட கலைதான் மனவளக்கலை.
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி