மலர் வழியே விளங்கும் மறைபொருள்
மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாறான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன். ( மலரே )
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெற என் கதை சொல்வேன் ( மலரே )
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள் ( மலரே )
பரம அணுக்கள் பல கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோத்தாடும் நாடகத்தோர்
கட்டம் எந்தத் தோற்றமும் ஆம் ( மலரே )
இறைவன் என்ற ஆதிபரம்
எடுத்த பலப்பல கோடி உரு
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம் ( மலரே )
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகிறேன் நான் அவன்கதையாய் ( மலரே )
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை ( மலரே )
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவறையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே ( மலரே )
என்னை கண்ணால் பார்மலராய்
எனதமாய்ப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே ( மலரே )
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்ணெனும் நுண்ணணுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுகுதல் அகண்ட பேரண்டம் ( மலரே )
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
பின்னை இந்தப் பேரறிவில்
பிறழாதிருப்பேன் விழிப்புடனே ( மலரே )
ஆறறிவாக வாழ் மனிதர்
அதற்கு ஏற்பப் பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன் ( மலரே )